18 July, 2014

புறப்பொருள்


புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடை முதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும்.

புறப்பொருள் திணைகள்
வெட்சித் திணை
கரந்தைத் திணை
வஞ்சித் திணை
காஞ்சித் திணை
நொச்சித் திணை
உழிஞைத் திணை
தும்பைத் திணை
வாகைத் திணை
பாடாண் திணை
பொதுவியல்
கைக்கிளை
பெருந்திணை

வெட்சித் திணை:

பழைய காலத்தில் பகை அரசனிடம் போர் செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித் திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

கரந்தைத் திணை:

பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர், கரந்தைத் திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

வஞ்சித் திணை:

பகை அரசன் நாட்டைப் பிடிப்பதற்காக அந்த நாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுதல் வஞ்சித் திணை எனப்படும்.  வஞ்சி வீரன், வஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

காஞ்சித் திணை:
படை எடுத்து வரும் பகை அரசனைத் தடுத்துத் தன் நாட்டைக் காக்க நினைக்கும் அரசன் போருக்குச் செல்லுதல் காஞ்சித் திணைஎனப்படும். காஞ்சி வீரன் காஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

நொச்சித் திணை:

பகை அரசன் படை எடுத்து வந்து கோட்டை மதிலைச் சூழ்ந்து கொண்டபோது, தன்னுடைய கோட்டையைக் காத்துக் கொள்ள அரசன் போர் செய்தல் நொச்சித் திணை எனப்படும். நொச்சி வீரன் நொச்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

உழிஞைத் திணை:

பகை அரசனுடைய கோட்டையை வெல்லக் கருதிய அரசன் தன் படைகளோடு மதிலைச் சுற்றி முற்றுகை இடுதல் உழிஞைத் திணைஎனப்படும். உழிஞை வீரன் உழிஞைப்பூச் சூடி, போருக்குச் செல்வான்.

தும்பைத் திணை:

பகை அரசர்கள் இருவரும் போர்க் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடுதல் தும்பைத் திணை எனப்படும். தும்பை வீரன் தும்பைப் பூச் சூடி, போருக்குச் செல்வான். 

வாகைத் திணை:

போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்து பாடுதல் வாகைத்திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.

பாடாண் திணை:
இதுவரை சொன்ன புறத்திணைகள் போர் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. பாடாண் திணையில் கொடை, கடவுள் வாழ்த்து, அரசனை வாழ்த்துதல் முதலியவை இடம்பெறும்.

பொதுவியல் திணை:
போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடுதல், போரில் இறந்த வீரர்களின் மனைவியர் இரங்கல், நிலையாமை முதலியவை பொதுவியல் திணையில் இடம்பெறும்.

கைக்கிளைத் திணை:
தன்னை விரும்பாத ஒரு பெண்ணிடம் ஒருவன் காதல் கொள்வதுகைக்கிளைத் திணை எனப்படும். இதை ஒருதலைக்காதல் என்று கூறுவர்.

 பெருந்திணை:
தன்னை விட வயதில் மிகவும் மூத்த பெண் ஒருத்தியிடம் ஒருவன் காதல் கொள்வது பெருந்திணை எனப்படும். இதைப் பொருந்தாக் காதல் என்று கூறுவர். கைக்கிளை, பெருந்திணை என்னும் இவ்விரண்டுதிணைகளையும் அகப்பொருள் திணையாகவும் கூறுவர்.



1 comment:

  1. TET TNPSC PG TRB இலவச ஆன்லைன் கோச்சிங் இலவச ஆன்லைன் டெஸ்ட் கல்வி வேலைவாய்ப்பு ஆசிரியர் செய்திகள் www.gurugulam.com

    ReplyDelete

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...