சொல்லிலக்கணம்

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ

சொல்லின் வகைகள் 
  • பெயர்ச்சொல் 
  • வினைச்சொல் 
  • இடைச்சொல் 
  • உரிச்சொல் 
பெயர்ச்சொல் 
பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
  • பொருட் பெயர் 
  • இடப் பெயர் 
  • காலப் பெயர் 
  • சினைப் பெயர் 
  • பண்புப் பெயர் 
  • தொழிற் பெயர்  என்று ஆறு வகைப்படும். 
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு அன்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.

  • பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம் 
  • இடப்பெயர் : சென்னை, தமிழகம் 
  • காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு 
  • சினைப்பெயர் : கண், கை, தலை 
  • பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம் 
  • தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல் 

வினைச்சொல் 
வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்.

முற்று இருவகைப்படும். அவை
1.தெரிநிலை வினைமுற்று 
2.குறிப்பு வினைமுற்று 

எச்சம் இரண்டு வகைப்படும். அவை
1.பெயரெச்சம் 
2.வினையெச்சம் 

தெரிநிலை வினைமுற்று 
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்

கயல்விழி மாலை தொடுத்தாள்

குறிப்பு வினைமுற்று 
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று
ஆகும்.

அவன் பொன்னன்.

பெயரெச்சம் 
பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.

படித்த மாணவன்

வினையெச்சம் 
வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.

படித்துத் தேறினான்

இடைச்சொல் 
இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.
ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ  என்னும் சுட்டுக்களும்; யா முதலிய வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று கூறப்படும்.
மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும்.

அவன்தான் வந்தான் 
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர். 

உரிச்சொல்
உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
உரிச்சொல் இருவகைப்படும்

1.ஒரு பொருள் குறித்த பல சொல் 
2.பல பொருள் குறித்த ஒரு சொல் 

ஒரு பொருள் குறித்த பல சொல்
  • சாலப் பேசினான். 
  • உறு புகழ். 
  • தவ உயர்ந்தன. 
  • நனி தின்றான். 
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.

பல பொருள் குறித்த ஒரு சொல்
  • கடிமனை - காவல் 
  • கடிவாள் - கூர்மை 
  • கடி மிளகு - கரிப்பு 
  • கடிமலர் - சிறப்பு 
இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...