புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடை முதலியவற் றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும்.
புறப்பொருள் திணைகள்
- வெட்சித் திணை
- கரந்தைத் திணை
- வஞ்சித் திணை
- காஞ்சித் திணை
- நொச்சித் திணை
- உழிஞைத் திணை
- தும்பைத் திணை
- வாகைத் திணை
- பாடாண் திணை
- பொதுவியல்
- கைக்கிளை
- பெருந்திணை
வெட்சித் திணை:
பழைய காலத்தில் பகை அரசனிடம் போர் செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித் திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

கரந்தைத் திணை:

பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர், கரந்தைத் திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.
வஞ்சித் திணை:
பகை அரசன் நாட்டைப் பிடிப்பதற்காக அந்த நாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுதல் வஞ்சித் திணை எனப்படும். வஞ்சி வீரன், வஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.
காஞ்சித் திணை:
படை எடுத்து வரும் பகை அரசனைத் தடுத்துத் தன் நாட்டைக் காக்க நினைக்கும் அரசன் போருக்குச் செல்லுதல் காஞ்சித் திணைஎனப்படும். காஞ்சி வீரன் காஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.
நொச்சித் திணை:

பகை அரசன் படை எடுத்து வந்து கோட்டை மதிலைச் சூழ்ந்து கொண்டபோது, தன்னுடைய கோட்டையைக் காத்துக் கொள்ள அரசன் போர் செய்தல் நொச்சித் திணை எனப்படும். நொச்சி வீரன் நொச்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.
உழிஞைத் திணை:

பகை அரசனுடைய கோட்டையை வெல்லக் கருதிய அரசன் தன் படைகளோடு மதிலைச் சுற்றி முற்றுகை இடுதல் உழிஞைத் திணைஎனப்படும். உழிஞை வீரன் உழிஞைப்பூச் சூடி, போருக்குச் செல்வான்.
தும்பைத் திணை:

பகை அரசர்கள் இருவரும் போர்க் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடுதல் தும்பைத் திணை எனப்படும். தும்பை வீரன் தும்பைப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.
வாகைத் திணை:
போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்து பாடுதல் வாகைத்திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.
பாடாண் திணை:
இதுவரை சொன்ன புறத்திணைகள் போர் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. பாடாண் திணையில் கொடை, கடவுள் வாழ்த்து, அரசனை வாழ்த்துதல் முதலியவை இடம்பெறும்.
பொதுவியல் திணை:
போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடுதல், போரில் இறந்த வீரர்களின் மனைவியர் இரங்கல், நிலையாமை முதலியவை பொதுவியல் திணையில் இடம்பெறும்.
கைக்கிளைத் திணை:
கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். இஃது ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என இருவகைப்படும்.
பெருந்திணை:
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். இதுவும் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.
வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்,
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - உட்க(து)
எதிரூன்றல் காஞ்சி, எயில்காத்தல் நொச்சி,
அதுவளைத்த லாகும் உழிஞை, -அதிரப்
பொருவது தும்பையாம். போர்க்களத்து மிக்கார்
செருவென் றதுவாகை யாம்.
-புறப்பொருள் வெண்பாமாலை

No comments:
Post a Comment