இயைபுத் தொடை

செய்யுளின் அடிகள் தோறும் இறுதி எழுத்து, அசை, சொல்
ஆகியன இயைந்து வருமாறு தொடுப்பது அடியியைபுத் தொடை
என்றால், ஓரடியுள் இருக்கும் சீர்களின் இறுதி எழுத்து முதலாயின
ஒன்றி இயைய வருமாறு தொடுப்பது சீர் இயைபுத் தொடை.
இயைபுத் தொடை விகற்பங்கள் ஏழு. அவையாவன: இணை
இயைபு, பொழிப்பு இயைபு, ஒரூஉ இயைபு, கூழை இயைபு,
மேற்கதுவாய் இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, முற்றியைபு.

இணை இயைபு (1,2 ஆம் சீர்களில் இயைபு)

‘மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே

         (4)                     ( 3)             (2)               (1)

இஃது அளவடி. இந்த அளவடிக்குள் நான்கு சீர்கள் உள்ளன.
நான்கு சீர்களுள் 1,2 ஆம் சீர்களின் ஈற்றெழுத்து ‘லே’ இயைந்து
வந்துள்ளதால் சீர்இயைபு. 3,4 ஆம் சீர்களில் இயைபு இல்லை.

பொழிப்பு இயைபு (1,3 சீர்களில் இயைபு)

 ‘மற்றதன் அயலே முத்துறழ் மணலே

               (4)            (3)               (2)             (1)

இதன்கண் ஒன்றாம் சீரிலும் மூன்றாம் சீரிலும் இறுதி எழுத்து
ஒன்றி வந்துள்ளது. இரண்டாம் நான்காம் சீரில் இத்தகைய இயைபு
இல்லை. எனவே, பொழிப்பு இயைபுத் தொடை

ஒரூஉ இயைபு (1,4 சீர்களில் இயைபு)

 நிழலே இனியதன் அயலது கடலே

     (4)                 (3)              (2)            (1)

இவ்வடியில் ஒன்றாம் நான்காம் சீர்களில் இயைபு வந்துள்ளது.
இரண்டாம் மூன்றாம் சீர்களில் இயைபு வரவில்லை; ஒருவியுள்ளது.
எனவே, ஒரூஉ இயைபுத் தொடை.

கூழை இயைபு (1,2,3 சீர்களில் இயைபு)

 ‘மாதர் நகிலே வல்லே இயலே

         (4)       (3)          (2)                (1)

இந்த அடியில் உள்ள மூன்றாம் இரண்டாம் மூன்றாம் சீர்களில்
‘லே’ என்று எழுத்து இறுதியில் பயில்கின்றது. கூழைச் சீரில்
(இறுதிச் சீரில்) இயைபு இல்லை.  எனவே, கூழை
இயைபுத் தொடை.

மேற்கதுவாய் (1,3,4 ஆம் சீர்) இயைபு

 வில்லே நுதலே வேற்கண் கயலே
         (4)             (3)              (2)           (1)

இவ்வடியில் ஒன்றாம் மூன்றாம் நான்காம் சீர்களில் இயைபு
காணப்படுகின்றது. இரண்டாம் சீரில் இயைபு இல்லை.
முன்பகுதியாகிய     கீழ்ப் பகுதியைவிடப் பின்பகுதியாகிய
மேல்பகுதியில் செறிவு காணப்படுகின்றது. ஆதலின், இவ்வாறு
அமைவது மேற்கதுவாய் எனப்பெறுகின்றது.

கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4 ஆம் சீர்களில் ‘இயைபு’)

பல்லே தவளம் பாலே சொல்லே

         (4)          (3)         (2)           (1)

இதன்கண் அமைந்த நான்கு சீர்களில் ஒன்றாம் இரண்டாம்
நான்காம் சீர்களின் ஈற்றெழுத்து ‘லே’ என்பது ஒன்றி வந்துள்ளது.
இவ்வடியிலுள்ள மூன்றாம் சீரின் இறுதி எழுத்து
‘லே’ என்பதாக இல்லை.  எனவே இவ்வாறு
அமையத் தொடுப்பதைக் கீழ்க்கதுவாய் என்கின்றோம்.

முற்று இயைபு (1,2,3,4 ஆம் சீர்கள் முற்றிலும் இயைபு)

 ‘புயலே குழலே மயிலே இயலே

         (4)          (3)             (2)          (1)

நான்கு சீர்களிலும் ஈற்றெழுத்து ‘லே’ என்பது ஒன்றி வந்துள்ளது.சீர்கள் எல்லாவற்றினும் முற்றாக இயைபுவருவது,முற்றியைபுத் தொடையாம்.
நன்றி
http://www.tamilvu.org/

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...